நேபாளத்தில்  இளையோர் புரட்சி ; புதிய சரித்திரம் எழுதப்படுமா?

நேபாளத்தின் அரசியல் நிலவரம், அண்மைய இளையோர் புரட்சியால் ஏற்பட்ட புயலுக்குப் பிறகு ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது.

செப்டம்பர் 8ஆம் திகதி வெடித்த மக்கள் போராட்டங்கள்,    முன்னாள் பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தலைமையிலான      அரசைக் கவிழ்த்தன.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 12ஆம் திகதி, நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்காலப்    பிரதமராகப் பதவியேற்றார். இந்த நிலைமாற்றம் நேபாளத்தின்  ஜனநாயக பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக   அமைந்துள்ளது.

புரட்சியின் தோற்றம்

நேபாளத்தில் ஏற்பட்ட வன்முறைகள் சமூக வலைதளங்களை  முடக்கிய அரசாங்கத்தின் உத்தரவுடன் தொடங்கினாலும்,     அதன் மூல காரணங்கள் மிகவும் ஆழமானவை. நேபாள மக்கள்தொகையில் நான்கில் ஒருவர் வறுமையில் வாடும்போது,     அதிகார வர்க்கத்தின் பிள்ளைகள் தங்களின் ஆடம்பர       வாழ்க்கையை சமூக வலைதளங்களில் காட்டியது, இளம்     தலைமுறையினரை ஆத்திரப்படுத்தியது.

இந்த ஆத்திரம், அரசியல் ஊழலையும், தகுதிக்கு          முக்கியத்துவம் தராமல் சொந்தபந்தங்களுக்கு பதவிகளையும்  சலுகைகளையும் வழங்கும் ‘நெப்போடிஸம்’ (Nepotism)    என்ற நோயையும் நோக்கி திசை திரும்பியது. ‘நெப்போ கிட்ஸ்’என்ற ஹேஷ்டேக் வாயிலாக இணைந்த இளைஞர்கள் தங்களின்எதிர்ப்பை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

ஆரம்பத்தில் ஒரு சமூக இயக்கமாகத் தொடங்கிய போராட்டம், அரசாங்கம் சமூக வலைதளங்களை முடக்கிய    போது அதுவொரு புரட்சியாக மாறியது. ‘ஜென்-இசட்’ (Gen-Z) என்ற பெயரில் அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான      இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறியதால், பாராளுமன்ற மற்றும்உயர் நீதிமன்ற கட்டடங்கள் எரிக்கப்பட்டன.

போராட்டங்களால் ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக குறைந்தது 51 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள்,      போராட்டத்தின் தூய்மையைக் கேள்விக்குள்ளாக்கினாலும்,    அரசியல் தலைமையின் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை உறுதிப்படுத்தியது.

இடைக்கால அரசு

 மக்கள் போராட்டங்களின் விளைவாக, பிரதமர் கே.பி. ஷர்மா   ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்தது. நாட்டின் அரசியல்    வெற்றிடத்தை நிரப்பும் பொறுப்பு இராணுவத்திற்கு ஏற்பட்டது.  இந்த சூழ்நிலையில், ஒரு இடைக்கால அரசாங்கத்தை       அமைப்பதற்கான தேவையை மக்கள் வலியுறுத்தினர்.

இடைக்கால பிரதமர் பதவிக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற  நீதியரசரை நியமிப்பதா அல்லது மக்கள் பிரபலமான காத்மண்டுநகர மேயரை நியமிப்பதா என்ற குழப்பம் ஏற்பட்டது.        இளந்தலைமுறையினர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண      செயற்கை நுண்ணறிவு செயலிகளான ஊhயவபுPவு போன்றவற்றை நாடியது, பாரம்பரிய அரசியல் அமைப்பின் மீதான அவர்களது   நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது.

இறுதியில், போராட்டங்களை வழிநடத்திய ‘ஜென்-இசட்’ (Gen-Z) இளைஞர்களின் வலுவான ஆதரவைப் பெற்றிருந்த முன்னாள்    தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி இடைக்காலப் பிரதமராக    நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 12ஆம் திகதி, காத்மாண்டுவின் மகாராஜ்கஞ்ச்      பகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் அவர் உத்தியோக பூர்வமாக பதவியேற்றார்.

இந்த நியமனத்தின் மூலம், நேபாளத்தின் வரலாற்றில் பிரதமர்  பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை அவர்பெற்றுள்ளார். இந்தத் தெரிவு, நேபாளத்தின் அரசியல் தலைமை திறமையையும், நேர்மையையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற மக்கள் மற்றும் இளைஞர்களின் விருப்பத்தை  பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.

எதிர்கால எதிர்பார்ப்புகள்

சுசீலா கார்க்கியின் நியமனம் நேபாளத்தின் அரசியல் நிலையற்றசூழ்நிலைக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.   ஆனால், அவர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலில், ஆர்ப்பாட்டக்காரர்களின் ஆத்திரம் அடங்கியிருந்தாலும்,அவர்கள் போராடிய பிரச்சினைகளான ஊழல், வறுமை, மற்றும் நெப்போடிஸம் போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு  காணப்படவில்லை.

‘ஜென்-இசட்’ (புநn-ணு) இயக்கத்திற்கு தெளிவான அரசியல் திட்டமோ, தலைமையோ இல்லாதது, ஒரு நிலையற்ற   சூழ்நிலையை உருவாக்கும் வாய்ப்புள்ளது.

இரண்டாவதாக, பல்தேசிய சமூக ஊடக நிறுவனங்களின்      தாக்கம் கவலைக்குரிய விஷயமாகும். இந்த நிறுவனங்கள்    நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் சட்டதிட்டங்களை    மதிப்பதில்லை. அவை தங்கள் இலாபத்திற்காக தவறான     தகவல்களைப் பரப்புவதற்கும், உணர்ச்சி பூர்வமான உரையாடல்களை ஊக்குவிப்பதற்கும் இடமளிக்கின்றன. இதுவொரு நலிந்த  தேசத்தின் ஜனநாயக அமைப்பை மேற்கொண்டு            பலவீனப்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

சுசீலா கார்க்கியின் முதன்மை பணி, சட்டத்தையும் ஒழுங்கையும்நிலைநாட்டி,  தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்துவதே ஆகும். அவரது நியமனம், நேபாள மக்களின்     மாற்றத்திற்கான விருப்பத்தை பிரதிபலிப்பதாக உள்ளது.

இது அடுத்த தேர்தலில் ஒரு புதிய அரசியல் சக்தியை      உருவாக்க வாய்ப்பு உள்ளது. நேபாளத்தின் எதிர்காலம்      இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், புதிய தலைமை ஒரு  சாதகமான மாற்றத்தின் ஆரம்பப் புள்ளியாக அமையும் என்று  நம்பலாம்.

இந்த சூழ்நிலையில், 2026 மார்ச் 5ஆம் திகதி நேபாளத்தில் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும், இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, பாராளுமன்றத்தையும் ஜனாதிபதி  ராம் சந்திரா கலைத்துள்ளார். கடந்த 12ஆம் திகதி முதல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

ஆனால், இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ‘பாராhளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம், ஜனநாயகத்துக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேபாளி காங்கிரஸ், மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் நேபாள கம்யூனிச கட்சி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஜனாதிபதி ராம் சந்திராவின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஆனால் தற்போதைய சூழலில் அக்கட்சிகளால் வீதிக்கு இறங்க முடியாத நிலைமைகளே இருக்கின்றன.

அந்தவகையில், இடைக்கால பிரதமர் சுஷீலா கார்கியால் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட 3 புதிய  அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர்.

நேபாள மின்சார ஆணையகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் குல்மான் கிசிங், முன்னாள் நிதி அமைச்சர் ராமேஷ்வர் கானல் மற்றும் வழக்கறிஞர் ஓம் பிரகாஷ் ஆர்யல் ஆகியோரே இவ்வாறு அமைச்சர்களாக பதவியேற்றுள்ளவர்கள் ஆவர்.

அந்தவகையில் நேபாளத்தின் எதிர்காலம் அடுத்த தேர்தலில் மக்கள் வழங்கும் ஆணையில் தான் வடிவமைக்கப்படவுள்ளது. அதுவரையில் நேபாளத்தின் அமைதி குலையாதிருப்பதே முக்கியம்.