” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்குவதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உடன்படாது. இது விடயத்தில் உறுதியான கொள்கையில்தான் எமது கட்சி உள்ளது.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
அத்துடன், குருந்தூர் மலை விவகாரத்தை பயன்படுத்தி நாட்டில் இனவாதத்தை பரப்புவதற்கு தமிழ்க் கட்சிகள் முற்படுகின்றன எனவும் அவர் கூறினார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
” நாட்டில் மீண்டும் இனவாதம் தலைதூக்ககூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுவருகின்றன. இப்பிரச்சினையை தொடர்வதற்கு இடமளிக்ககூடா என அரசிடம் கூறியுள்ளோம். அதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்.” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.
” மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவந்தார். அதனால் தோட்டப்பகுதிகளில் உள்ள தமிழர்களுக்குகூட அடையாள அட்டை இன்றி நகரப்பகுதிகளுக்கு வரமுடிகின்றது. போர் காலத்தில் அவ்வாறான சூழ்நிலை இருக்கவில்லை. எனவே, இந்நாட்டில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் அச்சமின்றி வாழ்வதற்குரிய சூழலை மஹிந்த ராஜபக்சவே ஏற்படுத்திக்கொடுத்தார்.
தமிழ் சகோதரர்கள் அல்லர், தமிழ்க் கட்சிகளுக்கே இனவாதத்தை பரப்ப வேண்டிய தேவை உள்ளது. அதனால்தான் பிரச்சினைகளை தோளில் சுமக்கின்றனர். தெற்குக்கும் தவறான சேதியை வழங்குகின்றனர்.
13 ஐ வழங்குவதற்கு எமது கட்சி உடன்படாது. இது விடயத்தில் எமது கட்சியின் கொள்கை மாறவில்லை. இரட்டை நிலைப்பாட்டிலும் நாம் இல்லை. இது சம்பந்தமாக அரசுடன் பேச்சு நடத்தவும் தயாராக உள்ளோம். யோசனைகளும் முன்வைக்கப்படும்.” – எனவும் காமினி லொக்குகே குறிப்பிட்டார்.