வடக்கின் அதிகாரப்பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது, கிழக்கு மாகாணத்தையும் ஒன்றிணைத்து நடத்துவது சிறந்ததாக உள்ளது. எனவே, இந்த விடயத்தில் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
“எதிர்வரும் 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் வடக்கிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்துப் பேசவுள்ளார். இதன்போது, வடக்கின் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பிலும் வடக்கில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கு தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்படும் கூட்டமாக இது அமையவுள்ளது. ” – எனவும் செல்வம் எம்.பி. குறிப்பிட்டார்.
” எங்களை பொறுத்தவரையில் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதொன்றாக உள்ளது. வடக்கு, கிழக்கு எமது தாயக பூமி. இனப் பிரச்சினை சார்ந்து, வடக்கு, கிழக்கு சார்ந்து இந்த மண்ணை காப்பதற்காகவே எத்தனையோ போராளிகளும் பொதுமக்களும் மரணித்தனர்.
எனவே, வடக்கில் மட்டும் அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பரவலாக்கம் தொடர்பிலும் வடக்கில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வு எடுப்பதற்கான விடயங்கள் தொடர்பிலும் எடுக்கப்படும் முயற்சிகள் காலத்தைக் கடத்துகின்ற, ஏமாற்றுகின்ற செயற்பாட்டை கையாள்வதாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கின்றோம். அதாவது வடக்கு, கிழக்கு சார்ந்த அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கம், வடக்கு, கிழக்கிலிருக்கும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதேயாகும். இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாது விடும் பட்சத்தில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதா? இல்லையா? என்பதை நாங்கள் முடிவெடுக்கக் கூடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளது.” – எனவும் கூட்டமைப்பு எம்.பியான செல்வம் குறிப்பிட்டார்.
எனவே வடக்கு, கிழக்கு இணைந்த அபிவிருத்தி, அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற வேண்டும் என்பது எமது கோரிக்கை. எனவே, கிழக்கை விடுத்து எவ்வித நல்லெண்ண முயற்சிகள் எடுத்தாலும், அந்த முயற்சிகள் தோல்வியடையும்.
எங்களைப் பொறுத்தவரையில் வடக்கு, கிழக்கு பிரதான மூச்சாக உள்ளது. எனவே, கிழக்கை விடுத்து வடக்கை மட்டும் பேச்சு அழைப்பதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். வடக்கு, கிழக்கு இணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாட வேண்டும். அதன் அடிப்படையில், உரிய காலத்துக்கு முன் தனது கருத்தை மாற்ற வேண்டும்.
எதிர்வரும் 11ஆம் 12ஆம் 13ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்” என்றார்
