வரவு – செலவுத்திட்ட அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர்,
” நாடாளுமன்ற வரவு செலவுத்திட்ட அலுவலகத்தை தாபிப்பதற்கான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக 2022.12.05 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்குமான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.” – என்று குறிப்பிட்டார்.
