You are currently viewing அரசியலமைப்பு பேரவையை இரு வாரங்களுக்குள் நிறுவ ஏற்பாடு!

அரசியலமைப்பு பேரவையை இரு வாரங்களுக்குள் நிறுவ ஏற்பாடு!

அரசியலமைப்பு பேரவை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பிற்கான 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த 31 ஆம் திகதி கையொப்பமிட்டு சான்றுரைபடுத்தினார். அன்று முதல் 21 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்தது.  

இதில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமையவே அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்படவுள்ளது. 

அரச சேவையில், அரசியல் தலையீடுகளை தவிர்த்து, சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளும் பிரதான நோக்கிலேயே அரசியலமைப்பு பேரவை ஸ்தாபிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தச்சட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் உள்ளடங்கியிருந்தாலும், 18 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அந்த ஜனநாயக ஏற்பாட்டுக்கு மஹிந்த ராஜபக்சவால் சமாதி கட்டப்பட்டது.

2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தி, நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்கும், நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்வதற்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் முன்வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. அதன்மூலம் அரசியலமைப்பு பேரவையும் மீள ஸ்தாபிக்கப்பட்டது.

அரசியலமைப்பு பேரவையில் 10 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இதன் தலைவராக சபாநாயகர் செயற்படுவார். (19 அமுலானபோது சபாநாயகராக கருஜயசூரிய பதவி வகித்தார். அவர் தலைவராக செயற்பட்டார்) பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இதில் நிரந்தர உறுப்புரிமையை பெற்றிருப்பர். அதாவது மேற்படி பதவிகளை வகிப்பவர்கள் பதவிநிலை அடிப்படையில் உள்வாங்கப்படுவார்கள்.

ஜனாதிபதியின் பிரதிநிதியொருவர் இடம்பிடித்திருப்பார், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மேலும் இருவரின் பெயரை முன்மொழியலாம். அதற்கு மேலதிகமாக மூன்று சிவில் பிரதிநிதிகளுக்கு (கட்சிசாராத) இடமளிக்கப்பட வேண்டும்.

பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சாராத கட்சி உறுப்பினர் ஒருவருக்கு இடமளிக்க வேண்டும். ( 19 அமுலில் இருந்தபோது ஜே.வி.பியின் சார்பில் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டிருந்தார்)

தேசிய தேர்தல் ஆணைக்குழு

 அரச சேவை ஆணைக்குழு

தேசிய பொலிஸ் ஆணைக்குழு

 மனித உரிமைகள் ஆணைக்குழு

இலஞ்சம் , ஊழல் ஆணைக்குழு

நிதி ஆணைக்குழு

எல்லை நிர்ணய ஆணைக்குழு

கணக்காய்வு ஆணைக்குழு

 தேசிய பெறுகை ஆணைக்குழு

மேற்படி ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களின் பெயர்களை, அரசியலமைப்பு பேரவையே ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கும். அரசியலமைப்பு சபை 10 உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர்,

உயர்நீதிமன்ற நீதியரசர்கள்,

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் மற்றும் நீதிபதிகள்

சட்டமா அதிபர்,

பொலிஸ்மா அதிபர்,

கணக்காய்வாளர் நாயகம்,

ஒம்புட்ஸ்மன்,

நாடாளுமன்ற செயலாளர் நாயகம்

ஆகியவற்றுக்கான நியமனங்கள், அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஜனாதிபதி தன்னிச்சையான முறையில் முடிவெடுப்பதை, இந்த ஏற்பாடு தடுத்தது.

எனினும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி ஆன பின்னர் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக அரசியலமைப்பு பேரவை இல்லாதொழிக்கப்பட்டது. அதற்கு பதிலாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டது.

பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஐவர் அதில் அங்கம் வகித்தனர். அரசியலமைப்பு பேரவைபோல் இதற்கு அதிகாரம் இருக்கவில்லை. ஜனாதிபதியின் நியமனம் குறித்து பரிந்துரை முன்வைக்கலாம், அதனை சவாலுக்குட்படுத்த முடியாது. ஒரு வாரத்துக்குள் பரிந்துரை முன்வைக்காவிடின், ஜனாதிபதியால் தன்னிச்சையான முறையில் நியமனம் வழங்கலாம்.

கணக்காய்வு ஆணைக்குழு, தேசிய பெறுகை ஆணைக்குழு தவிர ஏனைய ஆணைக்குழுக்கள் பாதுகாக்கப்பட்டன. எனினும், நியமனம் ஜனாதிபதி வசம் இருந்தது.

21 அமுலுக்கு வந்துள்ளதால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் இடம்பெற வேண்டும். புதிய நியமனம் இடம்பெறும்வரை பழைய நியமனம் செயலில் இருக்கும். மத்திய வங்கி ஆளுநர்கூட அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடனேயே இனி நியமிக்கப்பட வேண்டும். 

 …… 

Leave a Reply