You are currently viewing நவம்பர் 14 ஆம் திகதி பாதீட்டு உரை!

நவம்பர் 14 ஆம் திகதி பாதீட்டு உரை!

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க நபவம்பர்  14ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பித்து உரையாற்றுவார். 

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும்  தீர்மானிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், டிசம்பர் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்த இணங்கப்பட்டது. 

இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும். 

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளக்காக நேரத்தை ஒதுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் 09ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான காலப் பகுதி 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெறவிருப்பதுடன், பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான நேரம் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்படும்.

அதேநேரம், எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவிருப்பதுடன், அன்றையதினம் மு.ப 10.30 மணிக்கு தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது. 

Leave a Reply