உள்ளாட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யோசனைக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 8000 இலிருந்து 4000 வரை குறைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.
அத்துடன், பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரம் தவிசாளர் என்ற ஒற்றைத் தலைவருக்குச் செல்வதற்குப் பதிலாக தவிசாளர் தலைமையிலான குழுவுக்கு வழங்கப்பட வேண்டும், அடுத்த பிரதேச சபைத் தேர்தலுக்கு முன்னர் இந்தத் திருத்தங்களைச் செய்வதற்கு சட்ட வரைவு தயாரிக்கப்படும். எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே சுதந்திரக்கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் நிலைப்பாட்டை மேற்கண்டவாறு அறிவித்தார்.
” நான் ஜனாதிபதியாக இருக்கும்போது உள்ளாட்சிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சட்டமூலம் வந்தபோது, அதற்கு உடன்படவில்லை. எனினும், தற்போதாவது அந்த முடிவு தவறு என கருதி, மாற்றம் மேற்கொள்ளப்படுவது சிறந்தது” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நகர்வானது தேர்தலை பிற்போடும் தந்திரம் என டலஸ் ஆதரவு அணி குற்றஞ்சாட்டியுள்ளது.
