அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்தியா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
” ஐ நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாது இலங்கை அலட்சியம் செய்து வருவதால், இம்முறை காத்திரமான தீர்மானத்தை நிறைவேற்ற
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கையின் இந்த பித்தலாட்டம் செயலை சர்வதேச சமூகம் புரிந்து கொண்டு இறுக்கமான தீர்மானத்தை எடுக்கவேண்டும். இதேவேளை ஐநா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் சீனா ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன எனவும் சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, இந்தியா இனப்பிரச்சினைக்கான தீர்வுபற்றி பரிந்துரைத்துள்ளது. குறிப்பாக இப் பிரச்சினைக்கு தீர்வாக 13 ஆம் திருத்த சட்டம் ஊடாக என்று கூறப்பட்டுள்ளது. அவ்வாறு என்றால் இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தீர்வாக 13 ஆம் திருத்தத்தை தீர்வாக கருதுகிறதா என கோர விரும்புகிறோம்.
நிச்சயமாக இதனை ஈழத் தமிழினம் ஒருபோதும் தீர்வாக ஏற்றுக் கொள்ள மாட்டாது. எத்தகைய வற்புறுத்தல் என்றாலும் இதனை ஏற்றுக்கொள்ள முடுயாது.
13 ஆவது திருத்த சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாது, மலினப்படுத்தியுள்ளது. இதனை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். ஜ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா பொறுப்பு கூறல் தொடர்பில் எதையும் கூறவில்லை. இந்தியா பொறுப்பு கூறல் விடயத்தில் இந்தியா எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பாகும்.” – எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
