” வெளியக பொறிமுறையை ஏற்பதில்லை என்பதுதான் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். அதனையே வெளிவிவகார அமைச்சர் ஜெனிவாவில் அறிவித்தார்.”
இவ்வாறு பதில் அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (13) நடைபெற்றது.
இதன்போது, ” ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர், வெளியக பொறிமுறையை நிராகரித்துள்ளார். ஆனால், நல்லாட்சியின்போது இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானத்தில் கலப்பு பொறிமுறை இருந்தது. அப்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தார். தற்போது அவர் ஜனாதிபதியாக இருக்கின்றார். வெளிவிவகார அமைச்சரின் அறிவிப்பு அரசாங்கத்தின் நிலைப்பாடா” என்ற தொனியில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ரமேஷ் பத்திரண இவ்வாறு கூறினார்.
” வெளியக பொறிமுறையை நாம் ஏற்கப்போவதில்லை. அது எமது அரசமைப்புக்கு முரணான செயல். எமது அரசமைப்புக்கு உட்பட்ட வகையில் உள்ளக பொறிமுறை ஊடாகவே நடவடிக்கை இடம்பெறும். எமது ஜனாதிபதி, அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான். அரசாங்கத்தின் இந்த நிலைப்பாட்டையே வெளிவிவகார அமைச்சர் அறிவித்தார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.
