அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்சவின் தலைமையில் கூடிய போது சபாநாயகர் அறிவிப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை மேற்கொண்டார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 9 மனுக்கள் மீதான பரிசீலனை அண்மையில் நிறைவடைந்திருந்தது.
22 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு, கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட 9 பேரினால் குறித்த மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அந்த மனுக்களில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபைக்கு அறிவித்தபோதும் அது தொடர்பான விபரங்களை அவர் வெளியிட வில்லை.
