சர்வக்கட்சி இடைக்கால அரசமைப்பதற்கான பேச்சுகளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீவிரமாக இறங்கியுள்ளார். வஜீர அபேவர்தன உட்பட ஜனாதிபதிக்கு நம்பிக்கையான சிலரும் இதற்கான நகர்வுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக்கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி , இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், முஸ்லிம் தேசியக் கூட்டணி என்பன சர்வக்கட்சி அரசுக்கு ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பச்சைக்கொடி காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சு பதவிகளை ஏற்காவிட்டாலும், நாடாளுமன்ற குழுக்களில் தலைமைப்பதவியை ஏற்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளன.
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, சர்வக்கட்சி அரசில் இணைய மறுப்பு தெரிவித்துள்ளது. குறுகிய காலப்பகுதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றது.
எனினும், இன்னும் மூன்று வாரத்துக்குள் சர்வக்கட்சி அரசு அமையும் எனவும், அதன்பின்னர் அமைச்சரவை முழு அமைச்சரவை நியமிக்கப்படலாம் எனவும் தெரியவருகின்றது.
சர்வக்கட்சி அரசு உதயமான பின்னரே இடைக்கால பாதீட்டை முன்வைப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். அதற்காகவே நாடாளுமன்ற அமர்வை இடைநிறுத்தி, முன்னேற்பாடாக கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கும் அவர் தயாராகிவருகின்றார்.
அரசியல் உறுதிப்பாட்டை ஏற்படுத்தி, பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வக்கட்சி அரசே அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், அதன் அவசியத்துவம் குறித்தும் கட்சிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுவருகின்றது.
