You are currently viewing ’22’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஏற்க சட்டத்தரணிகள் சங்கம் மறுப்பு!

’22’ ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஏற்க சட்டத்தரணிகள் சங்கம் மறுப்பு!

மக்களின்  அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை – என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார். 

சட்டத்தரணிகள் சங்கத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு  சுட்டிக்காட்டினார். 

”  சிஸ்டம் சேன்ஞை (முறைமை மாற்றம்)  எதிர்ப்பார்க்கும் மக்களுக்கு, அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் உத்தேச 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை. எனவே, அரசியல் மற்றும் பொருளாதார  உறுதிப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமெனில் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். ” – எனவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் அவர் யோசனை முன்வைத்தார்.  

” அரசியலமைப்பு பேரவையின் பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருந்தால், அதன்மூலம் இடம்பெறும் நியமனங்களின் சுயாதீனத்தன்மை குறித்து ஐயப்பாடு எழக்கூடும். 

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சு பதவியை வகிக்கலாம் என  22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின்கீழ்வரும் திணைக்களங்கள் மற்றும் விடயதானங்கள் என்பன சட்டமூலத்தில் வரையறுக்கப்படவில்லை. எனவே, வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிடுவதன்மூலம் திணைக்களங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதி வசம் இருக்கும். 

பிரதமரை ஜனாதிபதி பதவி நீக்க முடியாது, பிரதமரின் ஆலோசனையின் பிரகாரம் அமைச்சர்கள் நியமிக்கப்பட வேண்டும் என ஏற்பாடுகள் இருந்தாலும், அவை இந்த நாடாளுமன்றத்தின் பதவி காலம் முடிவடைந்த பிறகே அமுலுக்குவரும். அதாவது தற்போதைய ஜனாதிபதிக்கு இந்த ஏற்பாடுகள் தாக்கம் செலுத்தாது.” எனவும் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளின் பங்களிப்புடன் அரசொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய 22 ஆவது திருத்தச்சட்டமூலம், தம்மால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் பிரகாரம், திருத்தியமைக்கப்பட்டு  நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.  

Leave a Reply