அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்த சட்டமூலத்தின் இறுதி நகல் இன்று
அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
இதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு அமைச்சரவை அனுமதி கிடைத்ததும் அதனை இன்று இரவு வர்த்தமானியில் பிரசுரிக்க உள்ளதாக நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தேச சட்டமூலத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் நீக்கப்பட்டு பிரதமர் உள்ளிட்ட நாடாளுமன்றத்துக்கு அதிகாரங்கள் மாற்றப்படுவதோடு பிரதமரின் ஆலோசனையுடனே ஜனாதிபதி அனைத்து விடயங்களையும் எடுக்க வேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் அதிகாரத்தை இல்லாதொழிக்கவும் பிரேரிக்கப்பட்டுள்ளதோடு சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றத்தில் மாத்திரம் நிறைவேற்றப்படக்கூடிய திருத்தங்களே இந்த சட்டமூலத்தினூடாக முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்த யோசனை தனிநபர் பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தியினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் வர்த்தமானியிலும் வௌியிடப்பட்டது. இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் சபாநாயகரினால் சபையில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் 22 ஆவது திருத்த யோசனை அண்மையில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது . இது தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற குழுக்களுடனும் சிவில் அமைப்புகளுடன் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த நாட்களில் ஆராய்ந்தார்.
இதன் படி திருத்த நகலில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. ஜனாதிபதி முன்வைத்த திருத்தமும் இதில் உள்ளடக்கப்பட்டதாக அறிய வருகிறது. இந்த யோசனை சட்டமா அதிபர் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டு புதிய நகல் சட்டமூலம் தயாரிக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்தது.
இந்த நிலையில் இறுதி சட்ட நகல் நீதி அமைச்சரினால் இன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்படும் என நம்பமாக தெரிய வருகிறது. அதன் பின்னர் இன்று இரவு இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை 22 ஆவது திருத்தமாக புதிய சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தமாகவே அது அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் என நீதி அமைச்சு தெரிவித்தது.
