You are currently viewing

” நாட்டில் பொருளாதார பிரச்சினையும்,  வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும்  இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய  ராஜபக்ச பதவி விலகும் வரை எமது  போராட்டம் ஓயாது.”

இவ்வாறு கோட்டாகம போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேய கோட்டாகம போராட்டகாரர்கள் இவ்வாறு அறிவித்தனர்.

” கோட்டாகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு இன்று நூல்களை கொண்டு வந்திருக்கின்றோம்.

நாட்டை ஆட்சி செய்த மோசமான ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் காரணமாகவும் தவறான வழிநடத்தல் காரணமாகவும் எமது நாட்டிற்கு இந்த நிலைமை ஏற்பட்டது.

தவறான ஆட்சியால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இரண்டு வருடங்களாக பாடசாலை மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலைமை காணப்படுகிறது.

எமது கோட்டாகம நூலகத்திற்கு கிடைத்த நூல்களை நாம் நாடளாவிய ரீதியில் கஷ்டப்படுகிற மாணவர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானித்தோம்.அந்த வகையில் மகிந்த ராஜபக்சவின் வீட்டுக்கு அருகில் உள்ள மிகவும் கஷ்டப்பட்ட ஒரு பகுதியில் ஒரு நூல்களை வழங்கினோம். இரண்டாவதாக நாம் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றோம். 

யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் எரிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்பொழுது நாம் பிறக்கவும் இல்லை.  எங்கள் கண்முன்னே நாங்கள் அமைத்த போராட்ட களத்தை நெருப்பில் எரித்தார்கள் அதனை நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். 

எமது கோட்டாகம நூலகம் எரிக்கப்படுமோ என அஞ்சியிருந்தோம். நூலகத்தை எரிப்பது என்பது சமூகத்தினை வீழ்த்துவதற்கு முக்கியமானதாகும்.

அந்த வகையில் யாழ் பொதுசன நூலகத்திற்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்திற்கும் கிளிநொச்சியில் இருக்கின்ற மாணவர்களுக்கும் நூல்களை வழங்கவிருக்கிறோம். அத்துடன் காலிமுகத்திடல் கோட்டாகமவில் இணைய வழியிலான பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.” எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். 

Leave a Reply