” நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதாக இருந்தால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும். எனவே, தற்போதைய சூழ்நிலையில் அந்த நடவடிக்கை பொருத்தமற்றது. எனவே, 19 ஐ மீள அமுலாக்கும் வகையில் 21 முன்வைக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கலாம்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை 21 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தி வரும் நிலையிலேயே பொன்சேகா இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
” சர்வஜன வாக்கெடுப்பை நடத்தக்கூடிய சூழ்நிலையில் தற்போது நாடு இல்லை. எனவே, அதற்கு வழிவகுக்காத வகையிலேயே சட்டம் இயற்றப்பட வேண்டும். அந்தவகையில் 19 ஆவது திருதச்சட்டத்தை மீள அமுலாக்கலாம். அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை. இதனை இலக்காக கொண்டு 21 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுமானால் அதற்கு ஆதரவளிக்கலாம். தற்போதைய சூழ்நிலையில் அது ஏற்புடைய நடவடிக்கையாக அமையும.” – எனவும் பொன்சேகா குறிப்பிட்டார்.
அதேவேளை, தனக்கும் அமைச்சு பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டிய பொன்சேகா, தன்னால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படாததால் அதற்கு தான் உடன்படவில்லை எனவும் கூறினார்.
