அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென்பதில் ஈ.பி.டி.பி. உறுதியாக இருக்கின்றது என்று அக்கட்சியின் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக பரவலாகப் பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தமிழ் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் அ.அமிர்தலிங்கம், மலையக மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் முஸ்லிம் மக்களின் தேசியத் தலைவராக விளங்கிய மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் ஆகியோர், சிறுபான்மை தேசிய இனங்களின் நலன்களுக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை சிறந்தது என்ற கருத்தை வலியுறுத்தியிருந்தனர்.
ஆனால் தற்போது, சிறுபான்மை தேசிய இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் உட்பட பெரும்பாலான அரசியல் தரப்புக்கள் நிறைவேற்று அதிகார முறைமை நீக்கப்பட வேண்டுமென்ற கருத்தை முன்வைத்து வருகின்றன. தற்போதைய ஜனாதிபதியும் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு வருகின்றார்.
இந்நிலையில் ஈ. பி.டி.பி. ஆகிய எம்மைப் பொறுத்தவரையில், அரசியலமைப்பில் எவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படினும் தற்போதைய அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான விடயங்கள் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதில் ஆரம்பித்து படிப்படியாக தமிழ் மக்களின் அபிலாசைகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதை கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக ஈ.பி.டி.பி. கட்சி வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
