” இலங்கையில் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தபட வேண்டும். இது விடயத்தில் இந்தியாவின் கரிசனை தொடரும்.”
இவ்வாறு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இலங்கையில் இன்று (28) ஆரம்பமான ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் பல தரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முற்போக்கு கூட்டமைப்பினர் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினர் ஆகியோருடன் தனித்தனியே கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
இதன்போது அரசியல், பொருளாதார மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பொதுவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அரசியல் தீர்வு பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவின் கரிசனை தொடரும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின்போது, ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமானதொரு அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் அழுத்தங்கள் தொடர வேண்டும் என கூட்டமைப்பு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு சாதகமான பிரதிபலிப்பை இந்திய வெளிவிவகார அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின்போதும் அரசியல் தீர்வு சம்பந்தமாக பேசப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் ,
” இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பும்படி தூதுவர் கோபால் பாக்லேவிடம் தந்திருந்த மலையக அபிலாசைகள் ஆவணம் தொடர்பில் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் விளக்கம் அளித்தார்.
நிலவரம்பற்ற சமூக சபை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் மேலதிக விபரங்களை கேட்டு தெரிந்துக்கொண்டார்.
மேலும் 13ம் திருத்தம் மூலமாக உருவாக்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முழு நாட்டுக்கும் உரித்தான அதிகார பரவலாக்கல் இயந்திரம் என்பது வலியுறுத்தப்பட்டது.
நாடு முழுக்க சிதறி வாழும் அனைத்து மலையக மக்களை கூட்டிணைக்கும் அதிகார பரவலாக்கல் இயந்திரமாக நிலவரம்பற்ற சமூக சபை செயற்படுவதை தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என்பது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு எடுத்து கூறப்பட்டது. புதிய அரசியலமைப்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ள குழுவிடம் இந்த யோசனை சமர்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது.
இந்திய தரப்பில் மலையக மக்களுக்கு, குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கு கல்வி, சுகாதாரம், கலாச்சாரம், வீடமைப்பு ஆகிய துறைகளில் உதவிகளை இன்னமும் விரிவுபடுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. உலகளாவிய ரீதியில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டிணைக்கப்படும் செயற்பாடுகளில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களை இன்னமும் முழுமையாக இணைத்துக்கொள்வது பற்றி வெளிவிவகார அமைச்சர் உறுதியளித்தார்.
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டின் போது முழு பட்டினியில் இருந்து இலங்கை மக்கள் இந்திய உதவியினால் காப்ப்பாற்றப்பட்டுள்ளனர். நன்றி. அதேவேளை நாட்டு மக்களுக்கு உணவளிக்க முடியாத அவமானத்தில் இருந்து இந்நாட்டு அரசாங்கமும் தற்காலிமாக காப்பாற்றப்பட்டுவிட்டது. இந்நிலைமை தொடர்ந்து நீடிக்க முடியாது. தொடர்ந்து வெளியில் இருந்து உணவு வர முடியாதே. நாம் எமக்குள் விரைவில் இவற்றுக்கு தீர்வு காணுவோம் என கூட்டணி தலைவர் மனோ கணேசன் வெளிவிவகார அமைச்சருக்கு மேலும் விளக்கம் அளித்தார்.
