
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பின்னர், அவருடன் பேச்சு நடத்துவதற்கான கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது. அதன்பின்னரும் சில தடவைகள் ஊடகங்கள் வாயிலாகவும் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டது.
எனினும், ஜனாதிபதி தரப்பில் இருந்து நேரம் ஒதுக்கப்படவில்லை. இரு தடவைகள் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் இறுதி நேரத்தில் சந்திப்பு பிற்போடப்பட்டது.
இந்நிலையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையிலேயே சந்திப்புக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம், புதிய அரசமைப்பு மற்றும் வடக்கு, கிழக்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
