திருத்தங்கள் சகிதமே புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான புதிய சட்டமூலம் பெப்ரவரி 10 ஆம் திகதி அரசால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி பல தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான தனது தீர்ப்பை உயர்நீதிமன்றம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போதே உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபைக்கு அறிவித்தார் சபாநாயகர்.
உயர் நீதிமன்றத்தின் பொருட்கோடலுக்கு அமைய, குறித்த சட்டமூலத்தின் மூன்றாவது சரத்தானது மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அதனை சட்டத்திற்குள் உள்வாங்க முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
எனினும், உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின், குறித்த சரத்தை சாதாரன பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
சட்டமூலத்தின் நான்காவது சரத்தானது அமைச்சரினால் குழுநிலை விவாதத்தின்போது திருத்தம் திருத்தம் செய்யமுடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, உயர்நீதிமன்ற தீர்ப்பையேற்று, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாமல் சாதாரண பெரும்பான்மையுடன் சட்டமூலத்தை நிறைவேற்றவே அரசு எதிர்ப்பார்க்கின்றது.
“பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)” எனும் தலைப்பிலான சட்டமூலத்தின் அரசியலமைப்பு ரீதியான செல்லுபடியாகும் தன்மை பற்றிய உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் பின்வருமாறு:-
சட்டமூலத்தின் வாசகம் 2
சட்டமூலத்தின் 2 ஆம் வாசகம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர் நீதிமன்றம் கருதுகிறது.
சட்டமூலத்தின் வாசகம் 3
அரசியலமைப்பின் பிரகாரம், சட்ட மூலத்தின் 3 ஆம் வாசகத்திற்கு ஆதரவாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையானது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு (வருகை தராதவர்கள் உட்பட) குறையாதிருந்தாலொழிய அதனை சட்டமாக இயற்ற முடியாதென உயர் நீதிமன்றம் கருதுகிறது.
எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 3வது வாசகத்தில் உள்ள ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் கருதுகிறது.
சட்டமூலத்தின் வாசகம் 4
எவ்வாறாயினும், அது அவ்வாறு இருக்கையிலும், சட்டமூலத்தின் 4 ஆம் வாசகத்தில் முன்மொழியப்பட்ட 10 ஆம் பிரிவின் உள்ளடக்கத்தில் 141 வது உறுப்புரையை உட்புகுத்துமாறு கெளரவ சட்ட மா அதிபர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவார் எனவும் மனுதாரர்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதற்காக அமைச்சர் அந்தத் திருத்தத்தை பாராளுமன்றத்தின் குழுநிலையில் முன்மொழிவார் எனவும் கற்றறிந்த மேலதிக மன்றாடி அதிபதி நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டமூலத்தின் வாசகம் 5
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், சட்டமூலத்தின் 5 ஆம் வாசகம் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாகவில்லை என உயர் நீதிமன்றம் கருதுகிறது.
சட்டமூலத்தின் வாசகம் 6
அரசியலமைப்பின் 80 (3) வது உறுப்புரையின் பிரகாரம் எந்தவொரு காரணத்திற்காகவும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 11 இன் செல்லுபடி பற்றி உயர் நீதிமன்றம் விசாரித்தலோ, தீர்ப்பளித்தலோ அல்லது எவ்விதத்திலும் கேள்விக்கு உட்படுத்தலோ ஆகாது என அது கருதுகிறது.
சட்டமூலத்தின் வாசகம் 10
உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி சட்டமூலத்தின் 10வது வாசகம் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் கருதுகிறது.
சட்டமூலத்தின் வாசகம் 11
சட்டமூலத்தின் 11வது வாசகம் அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டுக்கு முரணானது எனக் கருதுவதற்கு எந்த அடிப்படையும் கிடையாதென உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டமூலத்தின் வாசகம் 12
12வது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) அது உள்ள வடிவத்தில் அரசியலமைப்பின் 12(1) வது உறுப்புரைக்கு முரணாக இருக்குமென உயர் நீதிமன்றம் கருதுகிறது.
123(1)(இ) உறுப்புரையின் படி, உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, சட்ட மூலத்தின் 12வது வாசகத்தில் உள்ள உத்தேச பிரிவு 26(2) இன் ஏற்பாடுகள் திருத்தப்பட்டால், அது அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுடனும் முரணாக இருக்காது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
